ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? கோப்பையை வென்ற பிறகு ரோஹித் வெளியிட்ட தகவல்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.



துபாயில் நேற்று (மார்ச் 9) நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி, ரோஹித் ஷர்மா (76), ஸ்ரேயாஸ் ஐயர் (48), கே,எல்.ராகுல் (34 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், கோப்பையை வென்றது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான போட்டியில் இந்திய அணி வெல்லும் 2வது ஐ.சி.சி., கோப்பையாகும். இதற்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

டி20 சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, டி20 தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா, இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகி வந்தது.



இந்த நிலையில், கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா, ஓய்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு விஷயத்தை இங்கு சொல்ல நினைக்கிறேன்.


தற்போதைக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை. எனவே, ஓய்வு குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்., என தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement