காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரதம் உற்சவம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.

இரண்டாம் நாள் உற்சவமான கடந்த 4ம் தேதி காலை மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார்.

மூன்றாம் நாளான கடந்த 5ம் தேதி காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும், நான்காம் நாள் உற்சவமான கடந்த 6ம் தேதி காலை தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும்,. ஐந்தாம் நாள் உற்சவமான கடந்த 7 ம் தேதி காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும், ஆறாம் நாள் உற்சவமான முன்தினம் காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வந்தார்.

இதில், ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்

இதில், ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம் நாளை இரவு நடக்கிறது.

பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.

Advertisement