தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி செந்துாரில் சுவாமி வீதி உலா

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு, சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா நேற்று நடந்தது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

ஏழாம் திருநாளான நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் மற்ற கால பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, சுவாமிசண்முகர் காலையில் சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

சண்முக விலாச மண்டபத்திலிருந்து எழுந்தருளிய சண்முகர், துாண்டிகை விநாயகர் கோவில் அருகேவுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின், சுவாமி சண்முகருக்கு 16 வகை சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, உற்ஸவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் சரியாக மாலை 4:30 மணிக்கு பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். செம்பட்டு அணிந்து செவ்வரளி, ரோஜா போன்ற சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவப்பு சாத்திய கோலத்தில் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து மேலைகோவில் சேர்ந்தார்.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எட்டாம் திருநாளான இன்று மதியம் 12:00 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் திருநாளான மார்ச் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Advertisement