மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் 169 பேர் மீது வழக்கு பதிவு சாலை பணியின்போது தடுப்பு கட்டாயம்: டி.எஸ்.பி.,

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் அரசு பேருந்து - டிப்பர் லாரி மோதியதில், நான்கு நெசவாளர்கள் பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் விபத்தில் பலியான நான்கு பேரின் உடல்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது, உடல்களை வாங்க மறுத்து, பலியான குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறி, மருத்துவமனை முன் ஆர்பாட்டம் நடத்தினர்.

வழக்குப்பதிவு



திருத்தணி போலீசார்,அனுமதி பெறாமல் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அண்ணாநெசவாளர் சங்கத்தின் மாநில தலைவர் கலாம்விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 16 பெண்கள், 153 ஆண்கள் என, மொத்தம் 169 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருத்தணி- திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரு வழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் நேற்று நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தாரர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் போது, பணிகள் நடக்கும் இடத்தில் தடுப்பு வேலி, அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகை கட்டாயம் வைக்கவேண்டும்.

நடவடிக்கை



தவறும்பட்சத்தில் விபத்துக்கள் நடந்தால், பணி எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் கல்குவாரி, மண், கிராவல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று நடத்துபவர்கள், லாரிகளில் அரசு அனுமதித்ததைவிட கூடுதலாக பாரம் மற்றும் தார்ப்பாய் மூடாமல் சென்றால், வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல், திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா கூறுகையில், “நெடுஞ்சாலைவிரிவாக்கம் செய்யும் போது, வாகன ஓட்டிகளுக்கு பணிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மற்றும் சாலையோரம்எச்சரிக்கை பலகை வைத்து, உரிய உபகரணங்களுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும்,”என்றார்.

Advertisement