ரூ.8.50 லட்சம் போதை பொருளுடன் ஐ.டி., ஊழியர்கள் 5 பேர் சிக்கினர்

சென்னை : சென்னை, அண்ணாசாலை காவல் நிலைய எல்லையில், ஒயிட்ஸ் சாலை - ஸ்மித் சாலை சந்திப்பில் போதை பொருள் விற்கப்படுவதாக, ஏ.என்.ஐ.யு., எனும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நேற்று காலை, அந்த இடத்தில் போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தேகப் படும் படியாக நின்ற வேளச்சேரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 24, தரமணி பாலச்சந்திரன், 28, கொளத்துார் யுவராஜ், 25, பெரம்பூர் சுகைல், 24, அம்பத்துார் பிரவீன், 31, ஆகியோரிடம் விசாரித்தனர்.

அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 23 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 5.30 கிராம் உயர் ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த போதை பொருட்களின் மதிப்பு, 8.50 லட்சம் ரூபாய்.

விசாரணையில்,கைதான ஐந்து பேரும் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் என தெரிந்தது.

கைதான ஐந்து பேரும், ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்த தங்கள் கூட்டாளிகளுக்கு, போதை பொருட்களை வினியோகிக்கும் போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இது தொடர்பாக, மேலும், 8 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement