டி.என்.சி.ஏ., கிரிக்கெட் போட்டி எழும்பூர் மனமகிழ் அணி வெற்றி

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 2024- - 25ம் ஆண்டிற்கான, 'டி.என்.சி.ஏ., லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள், தமிழகம் முழுதும் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள அணிகள், பகுதி மற்றும் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, 50 ஓவர்கள் அடிப்படையில், போட்டிகள் நடக்கின்றன.

அதன்படி, 2வது மண்டலத்தில் இடம் பெற்றுள்ள ஏ.ஜி., அலுவலக அணியும், எழும்பூர் மனமகிழ் அணியும் நேற்று முன்தினம் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ஏ.ஜி., அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 216 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய எழும்பூர் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் விஜய் அபிமன்யூ, நங்கூரம் பாய்ச்சி ரன்களைக் குவித்தார். இவர் எதிர்கொண்ட பந்துகள் மூன்று முறை எல்லைக் கோடு தாண்டியும், நான்கு முறை எல்லைக் கோட்டை கடந்தும் சென்றன.

ரயில்வே வீரர் அசத்தல்

இதனால், 44.4 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 217 ரன்களை எடுத்த எழும்பூர் அணி, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காத விஜய் அபிமன்யூ, 100 ரன்கள் குவித்தார்.

மற்றொரு 'லீக்' போட்டியில், தென்னக ரயில்வே விளையாட்டு குழும அணியை, 41 ரன்கள் வித்தியாசத்தில் ரிசர்வ் பேங்க் மனமகிழ் அணி வீழ்த்தியது.

இப்போட்டியில், முதலில் ஆடிய ரிசர்வ் பேங்க் அணி, 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 185 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய தென்னக ரயில்வே அணி, 38.5 ஓவர்களில், 144 ரன்களில் சுருண்டது. ரிசர்வ் பேங்க் அணியின் அன்கித், 18 ரன் விட்டுக்கொடுத்து, 8 விக்கெட்டுகளை சாய்த்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement