இடநெருக்கடியில் இயங்கும் அங்கன்வாடி

ஓரிக்கை, காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு ஓரிக்கை, காந்தி நகரில், 2007ம் ஆண்டு, மாவட்ட சிறுசேமிப்பு ஊக்க நிதியில், 1.52 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாதததால், இக்கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, மழையின்போது மழைநீர் கசிந்து உட்புற சுவரில் ஈரப்பதம் ஏற்பட்டது.
கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால், குழந்தைகள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவலநிலை இருந்தது.
கழிப்பறை வசதியும் இல்லாமல், கட்டடமும் சேதமடைந்துள்தால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சப்பட்டனர்.
எனவே, ஓரிக்கை, காந்தி நகரில், சிதிலமடைந்த நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிழில் செய்தி வெளியானதை தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போடப்பட்டது.
இதற்கு மாற்றாக அருகில் உள்ள சிமென்ட் ஷீட் கூரை வேயப்பட்ட வீட்டின் வராண்டாவில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது. போதுமான இடவசதி இல்லாமல், நெருக்கடியான இடத்தில் அங்கன்வாடி மையம் இயங்குவதால், இங்கு பயிலும் குழந்தைகள் ஆடி, பாடி விளையாடி கல்வி கற்க முடியாத முடியாத சூழல் உள்ளது.
மேலும், மின்விசிறி வசதியும் இல்லாததால், கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காற்றோட்ட வசதி இல்லாமல் இங்கு பயிலும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடியிலும் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.