மூத்தோர் தேசிய தடகள போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை : பெங்களூருவில் நடந்த, தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

பெங்களூருவில், 45வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த, 4 முதல், 9ம் தேதி வரை நடந்தது. இதில், 38 மாநிலங்களை சேர்ந்த, 4,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக அணிக்காக, கோவை மாவட்டத்தை சேர்ந்த, 40 பேர் முழு திறமையையும் வெளிப்படுத்தினர்.

இதில், 75 வயதுக்கும் அதிகமான பிரிவில் வீராங்கனை லட்சுமி, உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போட்டிகளில் தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளியும், 80 வயதுக்கும் அதிகமான பிரிவில், விஜயலட்சுமி ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தங்க பதக்கங்களும் வென்றனர்.

வீரர் புருசோத்தமன்(85) வட்டு எறிதல், ஹேமர் த்ரோ போட்டிகளில் தலா ஒரு தங்கமும், காயத்திரி(45) போல்வால்ட் போட்டியில் தங்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கலமும், 80 மீ., தடை தாண்டுதலில், வெண்கலமும் குவித்தனர்.

தமிழரசி(40), 80 மீ., தடை தாண்டுதல் மற்றும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கமும், மும்முறை தாண்டுதலில் வெண்கலமும், காமாட்சி(75) நீளம் தாண்டுதலில் தங்கமும், 5 கி.மீ., நடை போட்டியில் வெள்ளியும் வென்றனர்.

அதே போல், ராமசாமி, 5 கி.மீ., நடை போட்டியில் வெண்கலமும், சீதாராமன், 800 மீ., ஓட்டத்தில் வெண்கலமும், 30 வயதுக்கும் அதிகமான பிரிவில், வீரர் கிஷோர் குமார் ஹேமர் த்ரோ போட்டியில் தங்கமும், கீர்த்தனா மும்முறை தாண்டுதலில் தங்கமும், மோகன்குமார் நீளம் தாண்டுதலிலும், 200 மீ., ஓட்டத்திலும் வெண்கலம் வென்றனர்.

கோகிலாமணி குண்டு எறிதலில் தங்கமும், வீராங்கனை சங்கவி குண்டு எறிதலில் வெள்ளியும் குவித்தனர்.

நிறைவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்றது. பதக்கங்கள் குவித்த வீரர்களை, கோயம்புத்துார் மாவட்ட மூத்தோர் தடகள சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement