இந்த ஆண்டில் முதல் முறையாக கே.ஆர்.பி., அணை நீர்வரத்து பூஜ்ஜியம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அணை கட்டியதிலிருந்து முதல் முறையாக கடந்த, 2020 மே, 1ல் அணைக்கு நீர்வரத்து இன்றி அணை வறண்டது. பின்னர் நீர்வரத்து துவங்கி, தண்ணீர் தேக்கினாலும், அணையில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வந்தது. இதனால், 5 ஆண்டுகளுக்கு பிறகு, 2022 டிச. 25ல், ஒரு முறை மட்டும் அணை முழு உயரமான, 52 அடியை எட்டியது. பின்னர், நீர்வரத்து இருந்தாலும், அணை நீர்மட்டம், 51 அடியாக மட்டுமே வைத்திருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜன., 21ல் அணை நீர்மட்டம், 52 அடியான முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கடந்தாண்டு அக்., 9ல், அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்று முதல் அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால், 50 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வந்தது. கடந்த, 8 வரை தொடர்ந்து, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால், கடந்த, 9ல் அணை நீர்மட்டம், 49.95 அடியாக சரிந்தது.

இதனிடையே இந்த ஆண்டில் முதல் முறையாக நேற்று அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று பூஜ்ஜியமானது. இதனால், அணை மொத்த கொள்ளளவான, 52 அடியில் நேற்று, 49.80 அடியாக நீர்மட்டம் குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக, 177 கன அடி தண்ணீர் வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் துவங்கும் முன்பே, அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement