நீர்நிலைகளில் தென்பட்ட அரிய பறவைகள்: தன்னார்வலர்கள் வியப்பு

உடுமலை : உடுமலை பகுதி நீர்நிலைகளில், கணக்கெடுப்பின் போது பல்வேறு அரிய வகை பறவைகள் தென்பட்டதால், தன்னார்வலர்கள் வியப்படைந்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில், உள்ள குளங்களில், ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

உடுமலை பகுதியிலுள்ள மருள்பட்டி, பாப்பான்குளம், செட்டிக்குளம், சின்னவீரம்பட்டி, கரிசல்குளம், ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட குளங்களில் இக்கணக்கெடுப்பு நடந்தது.

நீர்நிலைகளில் உள்ள பறவைகள், அருகில் புதர்களில் உள்ள பறவைகள் கணக்கிடப்பட்டது.இதில், சின்ன பட்டாணி உப்பு கொத்தி, சின்ன கொசு உள்ளான், முக்குளிப்பான், தாழைக்கோழி, செண்பகம், பனங்காடை, வெண்புருவ வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, கொண்டலாத்தி, புள்ளி மூக்கு வாத்து, சின்ன கீழ்க்கைச் சிறகி, சங்குவளை நாரை, சென்நீல நாரை, கரண்டி வாயன், கருப்பு அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, தாமரை கோழி,சாம்பல் சிலம்பன், பச்சை கிளி, மாங்குயில், வால் காக்கை, நீல வால் பஞ்சுருட்டான்,

கரிச்சான், ஊதாதேன் சிட்டு, சிறிய நீல மீன் கொத்தி, நாமகோழி, நீல தாழைக்கோழி, வெண்மார்பு கானங்கோழி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பொறி மண் கொத்தி, வெண் மார்பு மீன்கொத்தி, மயில், கவுதாரி, பனை உழவாரன், காட்டுத் தகைவிலான் போன்ற பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குநர் தேவேந்திரகுமார் மீனா வழிகாட்டுதலின் படி, வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.

Advertisement