பிளஸ் 2 தேர்வு நாளில் தந்தை மரணம்; உடலை வணங்கி பள்ளிக்கு புறப்பட்டார் மகள்!

27


திருநெல்வேலி: பிளஸ் 2 தேர்வு நாளான இன்று தந்தை மரணம் அடைந்த நிலையில், அவரது உடலை வணங்கி விட்டு மகள் தேர்வு எழுதச்சென்றார். கண்களை குளமாக்கும் இந்த நிகழ்வு, நெல்லை அருகே நடந்துள்ளது.



திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா இட்டமொழி அருகே வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவருக்கு வயது 55. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் மதுமிதா இட்டமொழி ஏ.வி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.


புற்றுநோய் பாதிக்கப்பட்ட அய்யாதுரை, இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மகள் மதுமிதாவிற்கு இன்று கணித பாடத்தில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தந்தை இறந்த நிலையில், அவரது உடலை வணங்கி விட்டு தேர்வு எழுத சென்றார்.


இதைக்கண்டு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அனைவரும் கண்ணீர் மல்கினர்.மாணவியின் தேர்வு எழுதி முடிந்து வந்தவுடன் இறுதி சடங்குகள் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement