கச்சத்தீவு விழாவிற்கு பைபர் படகுகளில் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்: மீனவர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்; இலங்கையில் உள்ள கச்சத்தீவு அந்தோணியர் சர்ச் விழாவிற்கு பைபர் கிளாஸ் படகில் செல்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா கத்தோலிக்க கிறிஸ்துவ பட்டங்கட்டி சமுதாய கிராம நிர்வாகத்தினர், மீனவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கிராம நிர்வாகத் தலைவர் ஜெரோன்குமார் கூறியதாவது:
1913ம் ஆண்டில் தொண்டியை சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி, ஓலைக்குடாவை சேர்ந்த அந்தோணி பட்டங்கட்டி ஆகியோர் கச்சத்தீவு கடற்கரையில் ஒதுங்கிய அந்தோணியார் சொரூபத்தை எடுத்து அங்கு மரத்தாலான சிறிய சர்ச் உருவாக்கி வழிபட்டு வந்தார்கள்.
இலங்கை மீனவர்களுடன் தற்போது ஒன்றுகூடி வழிபடுகிறோம். 1950ல் ஓலைக்குடா மீனவர்கள் பாய்மரப்படகுகளில் கச்சத்தீவு சென்று வந்தனர்.
1974ல் கச்சத்தீவு இலங்கை வசமானது, அதன் பிறகு 2011 வரை நாட்டுப் படகில் கச்சத்தீவு சென்றுவர அரசு அனுமதி அளித்தது.
தற்போது தடை விதிப்பால் விசைப்படகில் செல்வதற்கு ரூ.2000த்திற்கும் மேல் செலவாகிறது. எனவே மார்ச் 14, 15 ல் நடைபெறும் கச்சத்தீவு விழாவிற்கு லைப் ஜாக்கெட் அணிந்து, கடற்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன் பூர்வீக மீன்பிடித் தொழில் செய்யும் பட்டங்கட்டி மீனவர்களை ஒரு படகிற்கு 15 பேர் என பைபர் கிளாஸ் பொருத்திய படகில் கச்சத்தீவு பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த பொது நலவழக்கில் எங்களது கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
மேலும்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி