நான்கு வழிச்சாலையில் பயன்படாத கழிப்பறை; மதுரை ரோட்டில் பயணிகள் அவதி

பரமக்குடி; பரமக்குடியில் இருந்து மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளதால் மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. பரமக்குடி வரை நான்கு வழிச் சாலை உள்ள நிலையில் தொடர்ந்து ராமேஸ்வரம் இருவழிச்சாலையாக செல்கிறது.

இந்நிலையில் ரோடு பராமரிப்பிற்காக டோல் கேட் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக இங்குள்ள கழிப்பறைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வாகனங்கள் நிறுத்துமிடம், வாகன ஓட்டிகள் ஓய்விடம், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகள் என அனைத்தும் வீணாகி வருகிறது. இதே போல் கோடைகாலமாக உள்ளதால் நான்கு வழிச்சாலையில் உள்ள செடிகளும் பராமரிக்கப்படாமல் கருகி வருகிறது.

எனவே துறை அதிகாரிகள் கழிப்பறை உட்பட அனைத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement