அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி

32


தூத்துக்குடி: 'தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பேரக்குழந்தைகள் அனைவரும் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: மும்மொழி கொள்கை தொடர்பாக அமைச்சர் மகேஷ் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். சி.பி.எஸ்.இ, பள்ளியில் மாணவர்கள் மும்மொழிகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். 30 லட்சம் குழந்தைகள் மும்மொழி படிக்கின்றனர்.


மெட்ரிக் பள்ளியில் மும்மொழி படிப்பதை அமைச்சர் மகேஷ் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஸ் சொல்ல வேண்டும். நாங்கள் சொல்லும் ரூ.30 லட்சம் கணக்கை தாண்டிவிடும்.



தி.மு.க., அரசு டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலுக்காக மதுபான ஆலை மூலம் பணத்தை சம்பாதித்து எல்லா தொகுதியிலும் பதுக்கி வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

மும்மொழி கொள்கையை அறிவு உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் தியாகராஜன் கூறியதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: அமைச்சர் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார். ஒரு அமைச்சர் அறிவுள்ளவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதற்காக நான் கேட்க விரும்புகிறேன்.



உங்களது மகன் இந்திய குடிமகனா? அமெரிக்க குடிமகனா என்பதற்கு பதில் சொல்லி விட்டு பேசுங்கள். உங்களது மகன் மூன்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம். தமிழகத்தை பொறுத்தவரை எல்லா அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் எல்லோரும் மும்மொழி தான் படிக்கின்றனர்.


எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாராவது ஒருத்தர் பத்திரிகையாளர் சந்திப்பில், என் குழந்தை இரண்டு மொழியில் தான் படிக்கின்றனர் என்று தைரியமாக பேசுவார்களா? யாரும் பேச மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம். இதனால் தான் நாங்கள் சம கல்வியை கேட்கிறோம்.


டாஸ்மாக் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை திவால் ஆகி இருக்கிறது. தமிழகத்தில் ஆங்கில மொழியில் அதிகம் பேர் படிக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement