பாரதியார் பல்கலை ஊழல்; 16 பேர் மீது வழக்கு பதிவு

கோவை; கோவை பாரதியார் பல்கலையில் கம்ப்யூட்டர் கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு உறுதியானதால், 16 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பல்கலைக்கு தேவையான, 500 கம்ப்யூட்டர்கள், பிற தொழில்நுட்ப உபகரணங்கள், யு.பி.எஸ்., 2016ல் பல்வேறு கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பீடு, 84 லட்சத்து 57,120 ரூபாய்.

இதற்கு மொத்தமாக டெண்டர் விடாமல், 50க்கும் குறைவாக பிரித்து, பல்வேறு கட்டங்களாக கொள்முதல் செய்து முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரித்தது.

2023 டிசம்பரில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், பல்கலையுடன் தொடர்புடைய, 12 பேரிடம் விசாரணை மேற்கொள்ள, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற துறைகளில், நான்கு பேரிடம் விசாரிக்க அந்தந்த அரசுத்துறையிடம் இருந்து விசாரணைக்கு அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில், கம்ப்யூட்டர் முறைகேடை லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி செய்து, 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இப்பட்டியலில், முன்னாள் துணைவேந்தர் கணபதி, முன்னாள் பதிவாளர்கள் மோகன், வனிதா, முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சரவணச்செல்வன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பல்கலை பொறுப்பு பதிவாளர் ரூபா கூறுகையில், ''கம்ப்யூட்டர் முறைகேடு புகாரில், 16 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ள தகவல், சிண்டிகேட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பல்கலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிண்டிகேட் முடிவு செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை. எதிர்வரும் சிண்டிகேட் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement