நிவாரணம் வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்., ; சட்ட சபையில் அனல் பறக்கும் விவாதத்தால் பரபரப்பு

புதுச்சேரி: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு உடனடியாக தலா 5 ஆயிரம் வீதம் ரூ.207.18 கோடி புதுச்சேரி அரசு வழங்கியது. நான் அறிந்தவரை நம் நாட்டில் இதுவரை விரைவாக வழங்கப்பட்ட நிவாரணங்களில் ஒன்று என்று கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டினார். கவர்னரின் இந்த பாராட்டு உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று கடும் புயலை கிளப்பியது.


அங்காளன் (சுயேச்சை): பெங்சல் புயலால் பாதிக்கப்பட்டதில் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் சராசரியாக தரப்பட்டது. இந்த நடைமுறை சரியில்லை. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகள், இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் தரவில்லை.


எதிர்க்கட்சித்தலைவர் சிவா: பாதிப்பு நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவரை தேடி சென்று விரைவாக உதவுவது அவசியம். ஆனால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட வீடுகள், விலங்களுக்கு ஏன் இன்னும் நிவாரணம் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


செந்தில்குமார் (தி.மு.க.,): எங்கள் தொகுதி பாகூர் கடுமையாக பாதிக்கப்பட்டும் நிவாரணம் தரவில்லை. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என, பல எம்.எல்.ஏ.,க்கள் புகார் தெரிவித்தனர்.


அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: மழை புதுச்சேரியில் மட்டுமா பெய்தது. விழுப்புரம், கடலுாரில் பெய்யவில்லையா?

நாஜிம்(தி.மு.க); அமைச்சர் இது போன்று பேசுவது சரியல்ல. தமிழகத்தில் திராவிட மாடல் அரசு என்பதால் தான் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை. ஆனால் பெஸ்ட் புதுச்சேரியான உங்களுடைய அரசுக்கு ஏன் வழங்கவில்லை.


எதிர்க்கட்சித்தலைவர் சிவா: 50 ஆண்டு கால புதுச்சேரி வரலாற்றில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டியுள்ளது. 760 கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு வெறும் 61 கோடி ரூபாய் தந்துள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கும், கால்நடை இறந்தோருக்கும் ஏன் நிவாரணம் தரவில்லை. மத்திய அரசு, புதுச்சேரி அரசு கோரிய நிவாரணத்தை ஏன் தரவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் உங்களுடைய அரசு இருந்தும் உங்களால் நிவாரணத்தை வாங்க முடியவில்லை. மத்திய அரசால் மக்களுக்கு பயன் இல்லை.


அமைச்சர் லட்சுமி நாராயணன்: அரசு நிவாரணம் தர மறுக்கவில்லை. கணக்கெடுப்பு நடக்கிறது. நிதி ஒதுக்கி தருவோம். அது மத்திய அரசு நிதியா, மாநில அரசு நிதியா என்பதை முதல்வர் முடிவு செய்வார்.


வைத்தியநாதன்(காங்.,): எத்தனை நாட்களுக்கு தான் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டு இருப்பீர்கள். எப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுப்பீர்கள்.


இதனிடையே பல எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று ஏற்கனவே 4 மாதம் கடந்துவிட்டது. இன்னும் கணக்கெடுப்பு எத்தனை மாதங்கள் நடத்துவீர்கள் என, சராமரியாக கேள்வி எழுப்பினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.


அப்போது குறிக்கிட்ட துணை சபாநாயகர் ராஜவேலு: எம்.எல்.ஏ.,க்கள் பேசுவது நியாயமான கருத்து. ஒவ்வொருவராக பேசுங்கள்.


அமைச்சர் லட்சுமிநாராயணன்: முழுமையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும். நிவாரணமே வழங்க மாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. இதற்கு மேல் நிவாரணம் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா... வேண்டாம் என்று சொல்லுவீர்களா...


நேரு (சுயேச்சை): மத்திய அரசு கொடுத்துள்ள நிவாரணம் தொகை யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்கியது. ஆனால் கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. எனது தொகுதியில் மழைவெள்ளம் புகுந்து வீடுகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவருக்கும்போல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. இது சரியா?


எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரி புயல் நிவாரணம் அளிக்காததை மத்திய அரசினை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். தொடர்ந்து அவரது தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், நாக தியாகராஜன், காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் பரபரப்பு நிலவியது.

Advertisement