பேரன் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் பாட்டி பலி

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே சோங்கலாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 53. கூலி தொழிலாளி. இவர் மனைவி உமா மகேஸ்வரி, 50; இவர்களின் மகன் தினேஷ்குமார். கோவை தனியார் நிறுவன ஊழியர்.

இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுக்கும், கொடுமுடியில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமக்களை தஞ்சாவூர் அனுப்பி விட்டு முருகேசன், உமா மகேஸ்வரி, இவரது தாயார் சரஸ்வதி, 70, ஆகியோர் காரில் ஊத்துக்குளிக்கு சென்றனர். நடுப்பாளையத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்த பெரியம்மாள், 70, மீது மோதியது.

துாக்கி வீசப்பட்ட மூதாட்டி அதே இடத்தில் பலியானார். அதேசமயம் கார் மரத்தில் மோதி நின்றது. காரிலிருந்த மூவரும் காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சரஸ்வதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய காரை அரச்சலுார் போலீசார் கைப்பற்றினர். கார் ஓட்டிய முருகேசனை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் கைது செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement