பைக் திருடிய திருவல்லிக்கேணி வாலிபர் கைது
ஆதம்பாக்கம்,
ஆதம்பாக்கம், கக்கன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாகப்பன், 67. இவர், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
கடந்த மாதம், 14ம் தேதி, தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்பிளெண்டர் ப்ரோ பைக் திருடுபோனது.
இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக குற்றவாளியை தேடினர்.
இதில், பைக் திருடியது திருவல்லிக்கேணி, ரோட்டரி நகரை சேர்ந்த சந்தோஷ், 20, என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் நண்பர் ஒருவருடன் இணைந்து, பைக் திருடியதும், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் உண்டியலை உடைத்து, பணம் திருடியதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து, பைக், 1,000 ரூபாய் மீட்கப்பட்டது. பின், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.