தீவிர வறுமை கிட்டத்தட்ட ஒழிப்பு நிடி ஆயோக் உறுப்பினர் பேச்சு

2

புதுடில்லி :“நாட்டில் தீவிர வறுமையில் உள்ளோர் எண்ணிக்கை 1 சதவீதமாகவே உள்ளது. இது விரைவில் ஒழிக்கப்படும்,” என நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் வீர்மானி கூறியுள்ளார்.

தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி, தற்போது நிடி ஆயோக் உறுப்பினராக உள்ள அரவிந்த் வீர்மானி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

உலக வங்கி, 1960களில் ஒரு விளக்கத்தை உருவாக்கியது. அதன்படி, நாளொன்றுக்கு, 1 டாலர், அதாவது, 87 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமையில் உள்ளோராக குறிப்பிடப்படுவர்.

தற்போதைய நிலையில் அது 1.9 டாலர், அதாவது 165 ரூபாயாகும்.

அதன்படி பார்த்தால், நம் நாட்டில், கடந்த 11 ஆண்டுகளில் 12.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை பிரிவினர் எண்ணிக்கை, 2.3 சதவீதமாக குறைந்தது. தற்போது, 1 சதவீதம் பேரே இந்த பிரிவில் உள்ளனர்.

விரைவில், இந்தியாவில் தீவிர வறுமையில் உள்ளோரே இல்லை என்ற நிலை ஏற்படும்.

அதுபோல, நாளொன்றுக்கு 2 டாலர், அதாவது 174 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமை பிரிவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய பணவீக்கத்தின்படி நாளொன்றுக்கு 3.2 டாலர், அதாவது 279 ரூபாய் வருவாய் இல்லாதோர், தீவிர வறுமை பிரிவுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

நம் நாட்டில் இந்த பிரிவில், 12 ஆண்டுகளுக்கு முன், 50 சதவீதம் பேர் இருந்தனர். தற்போது, அது 15 சதவீதமாக குறைந்துஉள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள், இந்த பிரிவும் ஒழிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு வறுமையில் இருந்து மக்களை மீட்டெடுத்தாலும், வருவாய் ஏற்றத்தாழ்வு பாகுபாடு என்பது நிச்சயம் மிகப்பெரிய பிரச்னையாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement