தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு

16


தஞ்சாவூர்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல, நெல் குவிண்டாலுக்கு 3100 ரூபாய் வழங்கி உள்ள சத்தீஸ்கர் முதல்வரை சந்தித்து தமிழக விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஷ்ணு தியோ சாய் முதல்வராக உள்ளார்.

Tamil News
Tamil News
இவர் தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,100 ரூபாய் கொள்முதல் விலை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.

அதன் படி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான விஷ்ணு தியோ சாய், நெல் குவிண்டால் ஒன்றிற்கு 3,100 ரூபாய் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்கினார். இதனால், இந்த ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைத்தது.



பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 3,100 ரூபாய் வழங்கியதற்கு, தமிழ்நாடு காவிரி சமவெளி மாவட்ட விவசாய பிரதிநிதிகளான, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில், தஞ்சை, நாகை, திருவாரூர், விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், கும்பகோணம் வட்ட தலைவர் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பந்துருத்தி சுகுமாரன், நாகை மாவட்டம் பாலாஜி, திருவாரூர் மாவட்டம் செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்டம் சீதாராமன், பாலாஜி உள்ளிட்ட ஒன்பது விவசாய சங்க பிரதிநிதிகள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாயை நேரில் சந்தித்து மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், தென்னங்கன்றுகளை, நெல் மாலையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


மேலும், சத்தீஸ்கர் மாநில உணவுத்துறை செயலாளர் அன்பழகன் ஆகியோரை விவசாயிகள் நேரில் சந்தித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சத்தீஸ்கர் முதல்வரின் அறிவிப்பு இந்தியாவிலேயே முன்மாதிரியானது.


இந்த அறிவிப்பினால் அம்மாநிலத்தில் நெல் உற்பத்தி அதிக அளவில் 2024- 25ம் ஆண்டு, 1.50 கோடி டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாராட்டினோம் . தமிழக முதல்வரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில், அவரையும் பாராட்ட தயாராக உள்ளோம், என்றார்.

Advertisement