மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு '3டி லேசர்' திட்ட பணி துவக்கம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சிற்பத்திற்கு, '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி அமைக்கும் திட்ட பணிகளை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் துவக்கி உள்ளது.



மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களில், அர்ஜுனன் தபசு சிற்பம் குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட பாறையின் விளிம்பில், நிலத்தடியின் கீழும் மேலுமாக, புடைப்புச் சிற்பமாக சுவாமியர், தேவர்கள், விலங்குகள், கங்கை நதி உள்ளிட்டவை தொகுப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன.

இச்சிற்பத்திற்கு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முடிவெடுத்தது.

இதற்காக, சிற்பத்தின் முன்புறம், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள திறந்தவெளி இடத்தை, மாத வாடகை ஒப்பந்தத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பெற்றது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ஜுனன் தபசு சிற்பம் அருகில், புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த, அத்துறையிடம் முறையான அனுமதி பெறாதது, பாரம்பரிய சிற்பத்தை மறைக்கும் விதமாக தடுப்பு அமைத்தது என பல சிக்கல்களால், திட்டத்தை செயல்படுத்துவதில், இரண்டு ஆண்டுகளாக இழுபறி நீடித்தது.

இதுகுறித்து, கடந்த பிப்.,யில், நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனத்தினர், தற்போது இரும்பு கன்டெய்னர் வைத்து, பயணியர் நடக்க கற்களில் நடைபாதை அமைத்து, '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி திட்ட பணிகளை துவக்கி உள்ளனர்.

Advertisement