. ஒருபுறம் மட்டுமே வடிகால்கள்;எங்கும் தெரு நாய்கள் பரிதவிப்பில் செல்வி நகர் குடியிருப்போர்

திண்டுக்கல்: சேதமான ரோடுகள், ஒருபுறம் மட்டும் அமைக்கப்பட்ட வடிகால்கள் , மழை நேரங்களில் சகதியில் தடுமாறும் வாகன ஓட்டிகள், பொது மக்களை துரத்தும் தெரு நாய்கள், கொசுக்கள் என பல்வேறு பிரச்னைகளுடன் தத்தளிக்கின்றனர் திண்டுக்கல் திருச்சிரோடு சுப்பிரமணியபுரத்தை சுற்றிய மக்கள் .

திண்டுக்கல் திருச்சி ரோடு சுப்பிரமணியபுரம், செல்விநகர், பசும்பொன்நகர், எம்.ஆர்.எஸ்.நகர் குடியிருப்போர் நலச்சங்க பொருளாளர் முருகானந்தம், செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: திண்டுக்கல் திருச்சி ரோடு சுப்பிரமணியபுரம், செல்விநகர், பசும்பொன்நகர், எம்.ஆர்.எஸ்.நகர் உள்ளிட்ட தெருக்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் சேதமாக உள்ளது. முள்ளிப்பாடி ஊராட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள பகுதிகளில் ரோடுகளை சீரமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஒருபுறம் மட்டும் கழிவுநீர் வடிகால்கள் அமைத்துள்ளனர். இதனால் மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன. இங்கு சமூக விரோத செயல்களும் அதிகளவில் நடக்கின்றன. தெரு நாய்கள் அடிக்கடி மக்களை கடிக்கின்றன. இதை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ரோடெங்கும் முட்புதர்கள் மண்டியிருப்பதால் விஷ பாம்புகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது. தெரு நாய்கள் சில நேரங்களில் வெறி பிடித்து துரத்துகின்றன. ஊராட்சி நிர்வாகத்தினர் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். மழை நேரங்களில் மழைநீர், கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமலிருப்பதால் கழிவுநீர் ரோடுகளில் செல்கின்றன. கொசு உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. இதன்மூலம் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement