பொறியியல் கல்லுாரிகளில் விரைவில் 2,000 பேர் நியமனம்

பெங்களூரு: ''பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, சட்டசபையில் உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

காங்., -- ராகவேந்திர பசவராஜு ஹித்னால்:

கர்நாடகாவில் மொத்தம் எத்தனை பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. வரும் நாட்களில் புதிய பொறியியல் கல்லுாரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதா? கொப்பால் தாலுகாவில் ஒரு பொறியியல் கல்லுாரி கூட இல்லை என்பது அரசுக்கு தெரியுமா? கிராமப்புற மாணவர்களின் கல்வி வசதிக்காக, எப்போது புதிய பொறியியல் கல்லுாரி இங்கு திறக்கப்படும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர்: கர்நாடகாவில் பல பொறியியல் கல்லுாரிகளில், பல இடங்கள் காலியாக உள்ளன. இந்தாண்டு 2,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்று பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில் இந்த காலி இடங்கள் நிரப்பப்படும்.

கர்நாடகாவில் மொத்தம் 18 அரசு பொறியியல் கல்லுாரிகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இதில், 16 கல்லுாரிகள் கட்டப்பட்டு, தற்போது இயங்கி வருகின்றன. அரிசிகெரே, தேவதுர்காவில் பொறியியல் கல்லுாரி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கொப்பாலில் புதிய பொறியியல் கல்லுாரி கட்டும்படி கோரிக்கை வரவில்லை.

தற்போதைக்கு எலபுர்கா தாலுகாவின் கங்காவதி, தடகல் கிராமத்தில் அரசு பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

தடகல்லில் திறமை மேம்பாட்டு மையம் அமைக்க, விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் அரசு கல்லுாரிகள் அமைக்க, 2024 ஜூலையில் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டியினர் அளிக்கும் அறிக்கையின்படி, புதிய பொறியியல் கல்லுாரி திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement