பறவையின் சிறகில் நாமும் பறக்கலாம்!

''கையில் வைத்து உணவு கொடுத்து பழக்கும் பருவத்தில் இருந்தே, பறவை வளர்த்தால், அதனுடனான பிணைப்பு, நாளுக்கு நாள் வலுவடைவதை உணரலாம்,'' என்கிறார் டெய்ல்ஸ் அண்டு பெதர்ஸ் (Tails and Feathers) நிறுவன உரிமையாளர் பாரதிராஜா.

புதிதாக பறவை வளர்ப்பவர்களுக்கான டிப்ஸ்:

வெளிநாட்டு இன பறவைகளை மட்டுமே, வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க முடியும். இதில், புதிதாக பறவை வளர்க்க ஆசைப்படுவோர், சிறிய ரக பறவைகளை வளர்த்து, சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் பறவை வளர்ப்பதற்கான காரணம், வசிக்குமிடம், சுற்றுச்சூழலை பொறுத்து, எந்த ரக பறவை வாங்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அபார்ட்மென்ட்டில் வசிப்போர், அதிக சத்தம் எழுப்பும், சன்கனுார், மாங்க் ரக பறவைகளை வளர்க்க கூடாது. வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கும், இந்த ரக பறவைகளை வளர்ப்பது, சிக்கலை ஏற்படுத்தலாம்.

 காக்டெய்ல், ஸ்மால் கனுார், பிஞ்சர்ஸ், லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகள், குறைவாக சத்தமிடுவதால், வீட்டில் வளர்த்தாலும், அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு தொந்தரவு ஏற்படுத்தாது.

 பறவை வாங்கும் போது, அதன் கண்கள் பளபளப்பாக இருக்கிறதா, சுறுசுறுப்பாக இருக்கிறதா, அதன் இறக்கைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து பின் தேர்வு செய்ய வேண்டும்.

 பொதுவாக சிறிய ரக பறவைகள், 10-12 வாரங்களில் தாமாக சாப்பிட ஆரம்பிக்கும். அதற்கு முந்தைய நிலையில், கையில் எடுத்து வைத்து உணவு கொடுத்து பழக்கினால், அதனுடனான பிணைப்பு நாளுக்கு நாள் வலுவடைவதை உணரலாம்.

 தாமாக சாப்பிடும் பருவத்தில், காலை 7:00 -8:00 மணிக்குள், ஊறவைத்து முளைகட்டிய பயறு, மதியம் 12:00 மணிக்கு பழம், காய்கறிகள், மாலை 4:00 மணிக்கு, விதைகள் கொடுக்கலாம். இணை உணவாக, மல்டிவிட்டமின், கால்சியம் பவுடர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

 வாரத்தில் மூன்று நாட்களாவது, சூரிய வெளிச்சம் படும் இடத்தில் பறவைக்கான கூண்டை வைப்பது அவசியம். விட்டமின் டி சத்து, பறவையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது.

 பழக்கப்படுத்திய பறவையை வாங்கும் போது, அதனுடன் தினசரி ஒரு மணி நேரம் கட்டாயம் செலவிட வேண்டும். இல்லாவிடில், அது அக்ரசிவ்வாக மாறிவிடும்.

 கிட்டத்தட்ட 3 அடி கொண்ட கூண்டில், இரு சிறிய ரக பறவையை மட்டும் வைத்தால் தான், அவை சிறகடித்து விளையாடும். பறவைக்கான உணவு, பராமரிப்பு போலவே, அதற்காக ஒதுக்கும் இடத்தின் அளவும், சரியாக இருப்பது அவசியம்.

 இயற்கையின் மீது தீராத காதல் கொள்பவர்களால் மட்டுமே, பறவைகளின் நுட்பமான அசைவுகளையும், அதன் ஒலி சொல்லும் ரகசியத்தையும் புரிந்து கொள்ள முடியும். பறவையாய் மாறி, அதன் உலகத்திற்குள் சிறகை விரிக்கும் அனுபவம் பெற, ஒருமுறை பறவை வளர்த்து பாருங்கள்.

Advertisement