பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்


சென்னை: டில்லியில் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் உடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் 2வது முறை பொறுப்பேற்ற நிலையில், அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்ட் நியமிக்கப்பட்டார். முதன் முறையாக இந்தோ, பசிபிக் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அவர், அப்பயணத்தின் அங்கமாக நேற்று இந்தியா வந்தார்.


டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உலக உளவு அமைப்புத் தலைவர்களின் மாநாட்டில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி பங்கேற்றார். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் உடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தினார்.


இது குறித்து ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா- அமெரிக்கா இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement