வழக்கு பதிவு செய்தாலே மோசமானவர்கள் அல்ல!

மைசூரு : 'வழக்குப் பதிவு செய்வதால், அவர் மோசமானவர் என்று அர்த்தம் அல்ல' என, முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார்.

மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா. இவர் நேற்று, தன் 'எக்ஸ்' வலைதளத்தில், 'எம்.பி., சீட் இழந்தாலும் என் மீது தொண்டர்கள், மக்கள் வைத்துள்ள அன்பும், அக்கறையும் அப்படியே உள்ளது. என் மீது எட்டு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட போதும், என் சித்தாந்தத்தின் படி பணியாற்றி வருகிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

அதிருப்தி



இதற்கு ஜம்கண்டியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர், 'கட்சியில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்சிக்காக பணியாற்றி வருகிறேன்.

ஜம்கண்டி யுவ மோர்ச்சா பதவியை தவிர, வேறு எந்த பொறுப்பும் கிடைக்கவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பிரதாப் சிம்ஹா, 'நான் எம்.பி.,யாக இருந்தபோது, ஹூன்சூர் ஹனுமன் ஜெயந்தியின்போது நடந்த சம்பவத்தில், என் மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன' என்றார்.

இதற்கு மற்றொரு நெட்டிசன், 'சண்டை போடும்படி அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினாரா? சண்டை போட்டால், நடவடிக்கை எடுப்பேன் என்று கூறவில்லையா? முதலில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பா.ஜ.,வை நம்பி சண்டை போட்டால், சுடுகாட்டில் கூட இடம் கிடைக்காது' என்று குறிப்பிட்டிருந்தார்.

நல்ல நாள்



இதற்கு பிரதாப் சிம்ஹா, 'தொண்டர்கள் எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.பி.,யாகவோ இருக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் சிறப்பாக பணி செய்தால், நல்ல நாள் வரும். ஆனால், பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி போன்று மோசமான அரசியல் செய்யாதீர்கள்.

'உங்களை வளர்த்துக் கொள்ள, கட்சியை மேடையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பண பலத்தை விட, மக்கள் பலம் தான் பெரியது. வட மாநில அரசியல் வேறு; தென் மாநில அரசியல் வேறு. வழக்குப் பதிவு செய்வதால், அவர் மோசமானவர் என்று அர்த்தம் அல்ல' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement