'குளத்தில் மீன்கள் வாழ வாய்ப்பில்லை'சுகவனேஸ்வரர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி


'குளத்தில் மீன்கள் வாழ வாய்ப்பில்லை'சுகவனேஸ்வரர் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி


சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகிறது. அதன் குளத்தில், சில நாட்களாக மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இது கெட்ட சகுனம் என, பக்தர்கள் இடையே அச்சம் நிலவியது. இதுகுறித்து மீன்வளத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது.
இதையடுத்து மேட்டூர் அணை மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் உமாகலைச்செல்வி தலைமையில் குழுவினர், சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்து, நீர் மாதிரியை சேகரித்து சென்றனர். அதன் ஆய்வு முடிவில், 'குளத்தில் அதிகளவில் பாசி படர்ந்துள்ளது.
அம்மோனியா, உப்புத்தன்மை அளவு அதிகமாகவும், ஆக்சிஜன் அளவு குறைவாகவும் உள்ளது. இதனால் அந்த குளத்தில் மீன்கள் வாழ வாய்ப்பில்லை' என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'கோவில் குளத்தில் பராமரிப்பு என்பதே நடக்கவில்லை. ஏராளமான மீன்கள் இருந்த நிலையில், நாளுக்கு நாள் செத்து மிதந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சுத்தப்படுத்தி மீன்கள் வாழும்படி பராமரிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement