'குடி'மகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் மீண்டும் வருமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் சின்னம்மாபேட்டை அமைந்துள்ளது. இங்கு, திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளதால், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். தினமும், சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, 30,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்வர்.
டாஸ்மாக் உள்ளதால் 'குடி'மகன்களின் தொல்லை, கஞ்சா வாலிபர்களின் தொடர் அட்டகாசம் இருந்து வந்தது. பெண்கள், குழந்தைகளின் நலன் கருதி, இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த 2023 ஜூலையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், பகுதிவாசிகள் நிம்மதியடைந்தனர். ஆனால், புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், திறந்த வேகத்தில் செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. தற்போது வரை திறக்கப்படவில்லை.
இதனால் சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், வியாசபுரம், தொழுதாவூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு, கஞ்சா புழக்கம், 'குடி'மகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
புறக்காவல் நிலையம் திறந்ததும் சாலையில் மது அருந்துவது, கஞ்சா விற்பது, 'குடி'மகன்கள் மற்றும் கஞ்சா, வாலிபர்களின் அட்டகாசம் குறைந்து வந்தது. தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புறக்காவல் நிலையத்தில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தியும், போலீசார் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. எனவே, உயரதிகாரிகள் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.