கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன்
தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகிய கால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்ய, கூட்டுறவு நிறுவனங்களில், 2025 - 26ல், 17,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்படும்
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கு, உழவர்களின் குறுகிய கால கடன் தேவைகளுக்கு, வரும் நிதியாண்டில், 3,000 கோடி ரூபாய் மூலதன கடன் வழங்கப்படும்
விவசாய நிலமற்ற பட்டியல் சமூகத்தினருக்கு வெள்ளாடு கள், செம்மறி ஆடுகள் வாங்க மற்றும் பராமரிக்க, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, விவசாயம் சார்ந்த மத்திய கால கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்படும்
கடந்த, 2021 - 22 முதல் இம்மாதம், 11 வரை, 67.81 லட்சம் விவசாயிகளுக்கு, 54,800 கோடி ரூபாய் பயிர்க்கடன்களும், 12.24 லட்சம் பேருக்கு, 6,588 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் வட்டி மானியத்திற்கு, 853 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுதும், 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக, உழவர்களுக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்படுவதுடன், உரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. உழவர்கள் எளிதில் அணுகி, இடுபொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்காக, வரும் நிதியாண்டில் முதல்முறையாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து ரகங்களின் தரமான சான்று விதைகளும், பிற இடுபொருட்களும், தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.