13 ஆண்டுகளாகியும் பயன்பாடு இல்லாத ஆடு அடிக்கும் தொட்டி: ரூ.37 லட்சம் வீண்

திருமழிசை:திருமழிசை - -ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அருகே திருமழிசை அமைந்துள்ளது. இங்குள்ள சுடுகாடு அருகே, 2012ம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆட்டிறைச்சி கூடம் எனும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது.
இதன் வாயிலாக திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இறைச்சி கடை வியாபாரிகள் பயன்பெறுவர். ஆனால், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும், நவீன இயந்திரங்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராததால், செடி, கொடிகள் வளர்ந்து வீணாகி வந்தது.
இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம், 2022 செப்டம்பர் மாதம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டது.
தற்போது சீரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், ஆடு அடிக்கும் தொட்டி தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால், 37 லட்சம் ரூபாய் வரிப்பணம் வீணாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, திருமழிசை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி கூறுகையில், 'ஆடு அடிக்கும் தொட்டியை சீரமைத்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.