ஆடைகளை களைந்து ஊர்வலம் போகச் செய்வேன்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து

19


ஹைதராபாத்: 'பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களைப் பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்து பதிவிடுவோர், பொது இடங்களில் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்' என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியை சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் இருவரை ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும், தீர்மானத்தின் மீது சட்டபையில் விவாதம் நடந்தது. அப்போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:

சமீபத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என்னைப் பற்றி இழிவான மற்றும் தவறான வார்த்தைகளைப் பதிவிட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை அவர்கள் (பி.ஆர்.எஸ்) கண்டித்தனர். தவறான கருத்துகளை பதிவிட்டதற்கு அவர்கள் தான் காரணம். நான் பொறுமையாக இருந்தேன்.



ஆனால் எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக சமூக ஊடகப் பதிவுகளில் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படும்போது நான் எவ்வளவு காலம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்? எனது குடும்பப் பெண் உறுப்பினர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் ரத்தம் கொதிக்கிறது.


பி.ஆர்.எஸ்., தலைவர்கள் தங்கள் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அமைதியாக இருப்பார்களா? பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களைப் பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்து பதிவிடுவோர், பொது இடங்களில் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.


எங்களை மனரீதியாக காயப்படுத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியினர் இருக்காதீர்கள். நீங்கள் எல்லை மீறினால், விளைவுகள் மோசமாக இருக்கும். நான் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறேன், இளைஞர்களைத் தடுக்கிறேன், இல்லையெனில் அவர்கள் சாலைகளில் இறங்கி, உங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement