இனி எனக்கு ஓய்வே கிடையாது; முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு

86

சென்னை: 'வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் அனைத்திலும் நம்பர் ஒன் என்ற இலக்கை அடைய வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கிறது. அதனால், எனக்கு ஓய்வே கிடையாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசின் கடைசி முழு பட்ஜெட் நேற்று முன்தினம் (மார்ச் 14), தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்திற்கு பதிலாக, 'ரூ' என்ற தமிழ் எழுத்தில் தொகையை குறிப்பிட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு ஆதரவு குவிந்தாலும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்துள்ளன.


இந்த நிலையில், 'ரூ' என்பது பெரிதானது ஏன்? என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியுள்ளார்.



கேள்வி; பட்ஜெட்டுக்கு முன்னாடி நீங்க போட்ட டுவிட்டே நேஷனல் நியூஸ் ஆகிடுச்சே?

பதில்; பட்ஜெட் லோகோவை வெளியிட்டிருந்தேன். மொழி கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக இருப்போம் என்பதை காட்ட, ரூ என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழை பிடிக்காதவங்க அதனை பெரிய நியூஸ் ஆக்கிட்டாங்க.

மத்திய அரசிடம் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளத்தை தாங்க, பேரிடர் நிதியை விடுவியுங்க, கல்வி நிதியை தாங்க என்று தமிழகம் சார்பில் 100 கோரிக்கையை வைத்திருப்பேன். அதற்கு எல்லாம் பதில் அளிக்காத நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்காங்க.

அவங்களே பல பதிவுகளில் ரூ என்று தான் போட்டிருக்காங்க. ஆங்கிலத்தில் ரூபாயை ஆர்.எஸ்., (RS) என்று தான் எழுதுவாங்க. அதெல்லாம் பிரச்னையா தெரியாதவங்களுக்கு இதுதான் பிரச்னை. மொத்தத்தில் பட்ஜெட்டும் ஹிட்டு, தமிழும் ஹிட்டு.

கேள்வி; பட்ஜெட் எப்படி தயாரித்தீர்கள்?

பதில்; முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்ளோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள். மறுபுறம் அடித்தட்டு மக்களிடம் அவங்களின் தேவைகளை கேட்டு தெரிந்து கொண்டோம். மற்ற மாநிலங்கள், நாடுகளிடம் வரவேற்பை பெற்ற திட்டங்களை, நம்ம மாநிலத்திலும் கொண்டு வர முடிவு செய்தோம். இதற்காக தலைமை செயலகத்தில் பல ஆலோசனைகளை நடத்தி, இந்த பட்ஜெட்டை தயார் செய்தோம்.



கேள்வி; உங்களை பொறுத்தவரை பட்ஜெட் எப்படி வந்திருக்கு?

பதில்; நான் சொல்வதை விட, இந்தியா முழுவதும் வெளியாகியிருக்கும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளோடு அரசியல் குற்றச்சாட்டுக்களை 'செக்மேட்' செய்திருக்கு இந்த பட்ஜெட் என்று எழுதியிருக்காங்க.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியத்துறைக்கு கிடைத்த வெற்றி என்று எழுதப்பட்டிருக்கு. கல்வி, சமூகநலத்துறை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்காங்க. மக்கள் நலத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை பற்றி சிறப்பான தலையங்கத்தை எழுதியிருக்காங்க. இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது கூசாமல் கேட்கறவங்க, பத்திரிகைகளை படிக்கணும்.



கேள்வி; இந்த பட்ஜெட்ல உங்களுக்கு நெருக்கமான அறிவிப்பு எது?

பதில்; இந்த பட்ஜெட்டில் எல்லாமே எனக்கு நெருக்கமானது தான். மக்களுக்கு எது பிடித்திருக்கு என்பதை தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களில் போடப்பட்ட பதிவுகளை பார்த்தேன். பெண்கள் பாதிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்றுநோய்க்கான மருந்தை அரசே இலவசமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாங்க.
இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஒரு செய்தியை பார்த்தேன். தமிழகத்திலும் இதனை செயல்படுத்த முடிவு எடுத்தோம். அதன்படி, ஊர்க்காவல்படையில் திருநங்கைகளை ஈடுபடுத்தும் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மையில் விருதுநகரில் அரசு காப்பகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி கொண்டு சென்றேன். காப்பகங்களில் இருப்பவர்களை நாம் பார்த்துக் கொள்கிறோம். மற்ற குழந்தைளுக்காக உருவானது தான் தாயுமானவன் திட்டம். ஆதரவற்ற முதியவர்களுக்கான அன்புச்சோலை திட்டத்திற்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கேள்வி; எதிர்க்கட்சிகளோட விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்; ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அதனை பரிசீலிக்கலாம். நெகட்டிவாக சொல்வதற்காகவே சிலர் சொல்வது, அரசு மீதான வன்மத்தை மட்டுமே காட்டுகிறது. உருப்படியாக எதுவும் இல்லை. இருந்தாலும், நாம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருக்கோம் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லி விரும்புகிறேன்.

2011ல் இருந்து 2016 வரைக்கும் நம்முடைய கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு. இதுவே 2016ல் இருந்து 2021 வரைக்கும் 128 விழுக்காடாக அதிகரித்தது. இதுவே திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரையில் 93 விழுக்காடாக குறைந்திருக்கிறோம்.

கேள்வி; கடன் எல்லாமே கட்டுக்குள் இருக்கிறதா? எந்த வகையில் மத்த மாநிலங்களை விட தமிழகம் தனித்துவமாக இருக்கிறது?

பதில்; தமிழகத்தோட கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்கும் கடனை முறையாக செலவு பண்ணுகிறோமா? என்பது தான் முக்கியம்.
அந்த வகையில், எதிர்காலத் தலைமுறைக்கான முதலீடாகத்தான் தி.மு.க., அரசு கடன் தொகையை செலவு செய்திருக்கிறது. அதனால் தான் எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனங்களை வல்லுநர்களும், நாளேடுகளின் தலையங்கமும் தவறு என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார்கள்.

கேள்வி; பட்ஜெட் முடிந்தது, அடுத்ததாக என்ன பிளான்?

பதில்; இப்ப அறிவித்ததை எல்லாம் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த, அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கி விடுவதுதான் என்னுடைய அடுத்த வேளை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சணை, பார்லிமென்ட் தொகுதி குறைப்பு என்ற ஆபத்து. இப்படி தமிழகத்தின் நிதிக்காகவும், நீதிக்காகவும் போராட வேண்டியிருக்கு, அதனையும் பார்க்க வேண்டும்.
வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் அனைத்திலும் நம்பர் ஒன் என்ற இலக்கை அடைய வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கிறது. அதனால், ஓய்வே கிடையாது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement