பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி

தமிழக பொது பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிக்கான எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால், தாங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக மக்கள் ஏமாற்றமடைந்துஉள்ளனர். இனிவரும் துறை ரீதியான மானிய கோரிக்கையிலாவது வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படுமா என, திருவள்ளூர் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.




தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, கடந்த 14ம் தேதி சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் வாரி வழங்கப்பட்டன.

புதிய குடியிருப்புகள்

அதேசமயம், சென்னை மாநகராட்சிக்கு மிக அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு எவ்வித வளர்ச்சி திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.

இதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில், திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 45 கி.மீட்டர் துாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கிடைக்கும் அனைத்து சலுகைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிவோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், சென்னை மாநகரின் ஒரு அங்கமாக மாறிய திருவள்ளூரில், ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை நகரை ஒட்டி அமைந்துள்ள பூந்தமல்லி, ஆவடி, மீஞ்சூர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அபார்ட்மென்ட்களும், 'வில்லா' பிளாட்களும் உருவாகி வருகின்றன.

இதனால், திருவள்ளூர் மாவட்டம் அசுர வளர்ச்சியடைந்து வருவதுடன், போக்குவரத்து வாகனங்களும் அதிகரித்து வருகின்றன.

மேலும், திருவள்ளூர் - காக்களூர், மப்பேடு, கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைகளும், தொழிற்சாலைகளும் அதிமாக உள்ளன.

எதிர்பார்ப்பு

இவ்வாறு தொழிற்சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் இடம்பெறவில்லை.

திருவள்ளூர் நகரின் நீண்ட கால கோரிக்கையான புறவழிச்சாலை திட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தொழிற்சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆண்டுதோறும் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. வீணாகும் உபரி நீரை சேகரிக்க எந்த முனைப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.

பொது பட்ஜெட்டில் தான், திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இனி வரும் துறை ரீதியான மற்றும் மானிய கோரிக்கையிலாவது, வளர்ச்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜவுளி பூங்கா எதிர்பார்த்தோம்

ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் நெசவாளர்களின் நீண்டகால கோரிக்கையான ஜவுளி பூங்கா குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என, எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திருத்தணியை மையமாக வைத்து, ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும் என, 10 ஆண்டுகளாக பல்வேறு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-- ஏ.மணிமாறன், அம்மையார்குப்பம்.



வேளாண் பட்ஜெட்டும் ஏமாற்றமே

ஆந்திர மாநிலத்தில் ஒரு விவசாயிக்கு, 7,000 ரூபாயும், தெலுங்கானாவில், ஒரு ஏக்கருக்கு 10,000 ரூபாயும், கர்நாடக மாநிலத்தில், 4,000 ரூபாயும் விவசாய கவுர நிதி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நேற்று வெளியான வேளாண் பட்ஜெட்டில், அதுபோன்ற கவுர நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு காப்பீடு தொகை, ஆந்திர மாநிலத்தில் முழுதும் அரசே ஏற்கிறது. ஆனால், தமிழகத்தில் காப்பீடு தொகை, பங்கு தொகை செலுத்த வேண்டியுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக, ஒரு டன் கரும்பு, 4,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு டன் கரும்புக்கு, 250 ரூபாய் ஊக்கத்தொகை மட்டுமே அரசு அறிவித்துள்ளது.விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், முதல்வர் உழவர் நல சேவை மையம், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து இறப்பு இழப்பீடு உள்ளிட்ட விபத்து கால இழப்பீடு தொகை அதிகரித்துள்ளது ஆறுதல் அளித்துள்ளது.- ஒய்.வேணுகோபால், விவசாயிகள் சங்க தலைவர், திருவள்ளூர்.



நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதி

திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், விபத்து பிரச்னையை தீர்க்க, தேர்தல் வாக்குறுதியில் வெளிவட்ட சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருத்தணி நகராட்சியில் வெளியேறும் கழிவுநீர் நந்தியாற்றில் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு செய்வது, கால்நடை மருந்தகம் தரம் உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதன் காரணமாக, தொகுதி மக்களும் கடும் அதிருப்தியடைந்து உள்ளனர்.




மீஞ்சூரில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள விம்கோ நகர் வரை, மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது.இதை மீஞ்சூர் வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.நீர்நிலைகளை ஆழப்படுத்தி, விவசாயத்திற்கு பாசன வசதிகள் மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கோடைக்கால பயிர்களை தவிர்த்து வரும் விவசாயிகளுக்கு, மாற்று வழிமுறைகள் குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை. மீஞ்சூர் ஒன்றியம் முழுதும் நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நீண்டகால திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.




-நமது நிருபர் குழு-

Advertisement