மறுசீரமைப்பில் தொகுதிகளை குறைத்தால் போராடுவோம் தே.மு.தி.க., பிரேமலதா பேட்டி

1

பழனி: ''மறுசீரமைப்பில் லோக்சபா தொகுதிகளை குறைத்தால், தமிழக அரசுடன் கைகோர்த்து போராடுவோம்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.

பழனியில் அவர் கூறியதாவது:




தற்போதைய தமிழக பட்ஜெட்டில், 2006 தே.மு.தி.க., தேர்தல் அறிக்கையில் உள்ளவையே இடம் பெற்றுள்ளன. வேளாண் தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள சீனா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பது அதில் இருந்தது. உள்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தமிழக பட்ஜெட்டை தே.மு.தி.க., வரவேற்கிறது. டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் குறித்த புகாரை அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை சென்று, ஜாமினில் வெளிவந்தார்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு, தே.மு.தி.க., ஆதரவு தெரிவிக்கிறது. தாய்மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பதே எங்களின் நிலைப்பாடு. தமிழகத்தில் தமிழ் கற்பதை கட்டாயமாக்க வேண்டும். மறுசீரமைப்பில் தமிழக லோக்சபா தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால், தமிழக அரசுடன் தே.மு.தி.க., கைகோர்த்து மக்களுக்காக போராடும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement