எடையளவு முத்திரையிடும் முகாம்; ஆனைமலையில் இன்று துவக்கம்

பொள்ளாச்சி; ஆனைமலை, வால்பாறையில் எடையளவுகள் முத்திரையிடும் முகாம் இன்று முதல் நடத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்திரை ஆய்வாளர் வாசுதேவன் அறிக்கை:

சட்டமுறை எடையளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்ட முறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி வணிகர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும், மற்றும் பிற மேசை தராசுகள், விட்ட தராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடை அளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும். அவ்வகையில், வணிகர்களுக்கு உதவும் வகையில் காலாண்டுக்கான எடை அளவுகளை மறுமுத்திரையிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலையில், இன்று முதல் வரும் 23ம் தேதி வரையும், ஏப்., 8 முதல் ஏப்., 15ம் தேதி வரையும், வால்பாறையில் வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி; ஏப்., 1ம் தேதி முதல் ஏப்., 7 ம் தேதி வரையும் முகாம் நடத்தப்படுகிறது.

அதாவது, ஆனைமலை மற்றும் வால்பாறையில் உள்ள முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement