சென்னை-மும்பை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

1

சென்னை; சென்னையில் மார்ச் 23ம் தேதி நடக்கும் சென்னை, மும்பை அணிகள் மோதும் ஐ.பி.எல்., போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.



கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஐ.பி.எல்., போட்டிகள் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதே நாளில் நடைபெறும் மற்றொரு போட்டியில் ஹைதராபாத், ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.


மார்ச் 23ம் தேதி சென்னை-மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இந்த போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.


இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்.


ஆன்லைனில் டிக்கெட்டுகள் 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19ம் தேதி www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்கப்படும்.


போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு;


*ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது.


*கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னரே வர வேண்டும்.


*சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை சம்பந்தமான பொருட்களை கொண்டு வரக்கூடாது.


*அனைத்து கேலரிகளும் ரசிகர்களுக்கு விலையில்லா குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


*கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, விக்டோரியா விடுதி, ரயில்வே கார் பார்க்கிங், வாலாஜா சாலை, வி. பட்டாபிராமன் கேட் ஆகிய இடங்களின் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement