நக்சல் ஆதிக்க பகுதியில் முதல் 'மொபைல் டவர்'

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்பால் எந்த வித முன்னேற்றமும் இல்லாத சுக்மா மாவட்டத்தில், முதல் முறையாக மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி அடைந்து விட்டன. ஆனால், நக்சல் பாதிப்பு அதிகமுள்ள காரணத்தால் சத்தீஸ்கரின் சுக்மா, பிஜப்பூர் அடங்கிய பஸ்தார் மாவட்டங்களில் இன்னமும் அதற்கான அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள தெக்குலகூடம் என்ற சிறிய கிராமத்தில் முதல் முறையாக மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, சி.ஆர்.பி.எப்., துணை ராணுவ படை அலுவலகத்தில் இப்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் கோபுரம் வாயிலாக, அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் பயன்பெறும். அந்த பகுதியில் உள்ள மக்களும் மொபைல் போன்களை பயன்படுத்த முடியும்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 600 கி.மீ., தொலைவில் இந்த மொபைல் போன் கோபுரம் உள்ளது. தெக்குலகூடம் கிராமத்தில், கடந்த 2021ல், நக்சல்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், 23 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த பகுதியில் இருந்து நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க சி.ஆர்.பி.எப்., முகாம் அமைக்கப்பட்டது.

Advertisement