பாதாள சாக்கடையில் அடைப்பு: சாலையில் கழிவுநீர் தேக்கம்

கடலுார் : கடலுார் நத்தவெளி ரோடு - சரவணா நகர் இணைப்பு சாலை வளைவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி, சாலை சேதமாகி குளம்போல் கழிவுநீர் நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

கடலுார் நத்தவெளி ரோடு - சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏரளாளமாக செல்கின்றன. இங்குள்ள சாலை வளைவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மேன்ேஹால் வழியாக கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை சேதமாகி குளம் போல் கழிவுநீர் நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement