140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்

15

புதுடில்லி: 'உங்கள் சாதனைகளால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைகின்றனர்,' என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவர் சென்ற விண்கலன் பழுதாகி போனதால் மாதக்கணக்கில் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது எலான் மாஸ்க் நிறுவனத்தின் விண்கலன் மூலம் அவர் பூமி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அவர் வரும் விண்கலம் பூமியில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்:
நான் இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது சாதனைகளால் 140 கோடி இந்தியர்கள் பெருமை அடைகின்றனர். நீங்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள்.

உங்கள் உடல் நலத்துக்காகவும், உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேறவும் இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நான் அமெரிக்க அதிபர் டிரம்ப், பைடன் ஆகியோருடன் பேசும் போதெல்லாம் உங்களது நலம் பற்றி தொடர்ந்து விசாரித்து வந்தேன்.

நீங்கள் பூமிக்கு திரும்பியதும், இந்தியாவுக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிகவும் பெருமைக்குரிய மகள் ஒருவரை தங்கள் நாட்டுக்கு வரவேற்பதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நீங்களும், வில்மோரும் பத்திரமாக பூமியை வந்தடைய எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement