நகை விற்பனை ரசீதில் எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வழக்கு

மதுரை : தங்க நகைகள் விற்பனை ரசீதில் நகைகளில் பொறிக்கப்பட்டுள்ள எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற தாக்கலான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் சுரேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

தங்க நகைகளில் 'ஹால்மார்க் முத்திரை' இடம்பெறுவதை மத்திய அரசு 2018 ல் கட்டாயமாக்கியது. அத்துடன் எச்.யூ.ஐ.டி.,எண் (ஹால்மார்க் யூனிக் ஐடென்டிட்டி-தனித்துவ அடையாள எண்) இடம்பெற 2021ல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் நகையின் தரம் உள்ளிட்ட விபரங்களை அறிய முடியும். இந்நடைமுறை இந்தியாவில் 803 மாவட்டங்களில் 343 ல் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உள்ளது. இப்பாகுபாடு சட்டத்திற்கு முரணானது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

நகைகளை விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஜி.எஸ்.டி., ரசீதில் நகைகளில் பொறிக்கப்பட்டுள்ள எச்.யூ.ஐ.டி.,எண் இடம் பெற வேண்டும். இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஹால்மார்க் முத்திரை நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர், இந்திய தர நிர்ணய ஆணைய இயக்குனர் ஜெனரல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்.,4க்கு ஒத்திவைத்தது.

Advertisement