சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு

19


சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள, 10 மாடி வணிக வளாகத்தை இடிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. அந்த கட்டடத்தில் இருப்பவர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் பல்வேறு பகுதிகளில் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. சென்னை தி நகர், பாண்டிபஜார் சர் தியாகராய சாலையில், ஜனபிரியா பில்டர்ஸ் நிறுவனம் சார்பில், 10 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் 4வது மாடியில் இருந்து, 10வது மாடி வரை விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை 'சீல்' வைக்க சி.எம்.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில் விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை, 2019ல் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்து கட்டட உரிமையாளர், கடந்த ஆண்டு உயர் நீதி மன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குறிப்பிட்ட கட்டடத்தில், 4வது மாடியில் இருந்து, 10வது மாடி வரை விதி மீறி கட்டப்பட்ட பகுதிகள், பக்கவாட்டில் விதி மீறி கட்டப்பட்ட கடைகள் ஆகியவற்றை இடிக்க உயர் நீதிமன்றம் சி.எம்.டி.ஏ.,வுக்கு பிப்., 10ல் உத்தரவிட்டது.



உயர் நீதிமன்ற உத்தரவுபடி விதிமீறி கட்டப்பட்ட பாகங்களை இடிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்டடத்தை இடிப்பது தொடர்பான நோட்டீஸ் அந்த கட்டட உரிமையாளர்கள், அதில் கடைகள் வைத்திருப்போருக்கு அனுப்பப்பட்டது. கட்டட உரிமையாளர்கள் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்ட நிலையில், அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


கட்டடத்தை காலி செய்யும் அறிவிப்பையும் சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. கட்டடத்தை, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள், 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்.இவர்கள் காலி செய்த பின் விதிமீறி கட்டிய கட்டடங்களை இடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement