டாஸ்மாக்கில் முதல்வர் படம் : பா.ஜ.,மகளிர் அணி இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் கொட்டப்பட்டி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டிய பா.ஜ., மகளிர் அணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் கொட்டப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பா.ஜ., மகளிர் அணி மாவட்ட துணை தலைவர்கள் மல்லிகா, உமா மகேஸ்வரி இருவரும் மாலை சென்றனர். பின் கட்சியினருடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் படத்தை டாஸ்மாக் வாசலில் ஒட்டினர்.

தகவல் அறிந்த வந்த தாலுகா போலீசார் தகாத வார்த்தையில் பேசியது, அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மல்லிகா, உமாமகேஸ்வரி இருவரையும் கைது செய்து தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.

இதையறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், உள்ளிட்ட 50 க்கு மேலான கட்சியினர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்து கைது செய்த மகளிர் அணியினரை விடுதலை செய்யக்கோரி முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். போலீசார் அங்கிருந்த கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement