இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்

சம்பல்: இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேரில் ஆஜராகும்படி சம்பல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை எதிர்த்து மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கு எதிராகவும் போராடுகிறோம்' என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய நாட்டுக்கு எதிராக பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உ.பி., மாநிலம் சம்பல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல் பதிலளிக்க வேண்டும் அல்லது ஏப்ரல் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக முதலில் சிம்ரன் குப்தா என்பவர் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி ரத்து செய்தார்.
தற்போது சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது தான், நீதிபதி தற்போது ராகுலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.









