முக்கியம் தாய் மற்றும் மனைவியை தாக்கிய வழக்குகளில் மகன், கணவருக்கு நுாதன நிபந்தனை ஜாமின்

ராமநாதபுரம்:தாயை தாக்கிய மகன் தினமும் முதியோர் இல்லத்தில் கையொப்பம் இட வேண்டும். மனைவியை தாக்கிய கணவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மனநல வார்டில் தினமும் கையொப்பம் இட வேண்டும் என நுாதன நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி பிரியா 40. பரமக்குடி அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளராக உள்ளார். இவரது கணவர் பன்னீர்செல்வம் 44, மதுபோதையில் தாக்கியதாக பிரியா பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்தார். பன்னீர்செல்வம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்க அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்தார்.

பன்னீர் செல்வத்துக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிபதி, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள மது அடிமை மீட்பு நோயாளிகளுக்கான மனநல மருத்துவ பிரிவில் ஒரு மாதத்திற்கு தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணிக்குள் வந்து கையெழுத்திட உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு



பார்த்திபனுார் அருகே உள்ள பி.பி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் 80. இவரை சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மூத்த மகன் பொன்னுதுரை பாண்டி 52, தாக்கினார். கோவிந்தம்மாள் புகாரில் பார்த்திபனுார் போலீசார் பொன்னுதுரை பாண்டி மீது வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி பொன்னுதுரை பாண்டி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள வள்ளலார் முதியோர் இல்லத்திற்கு தினமும் 2 முறை சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி மெகபூப் அலிகான் உத்தரவிட்டார்.

Advertisement