ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்

5


புதுடில்லி: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பில் இருந்த டில்லி எஸ்.ஐ.,யை லஞ்ச வழக்கில் சி.பி.ஐ., கைது செய்தது.


இது தொடர்பாக சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: எஸ்.ஐ., லஞ்சம் கேட்டது தொடர்பாக சி.பி.ஐ.,க்கு புகார் வந்தது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


புகார் அளித்தவர் மும்பையில், சுற்றுலா மற்றும் 'டிராவல்ஸ்' தொழில் நடத்தி வருகிறார். பண நிர்வாகம் குறித்த நிறுவனத்துடனும் அவருக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனம் அளித்த தகவல்கள் தொடர்பாக டில்லி ரோஹிணி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரரின் மைத்துனரை சந்தித்து எஸ்.ஐ., விசாரணைக்கு வர வேண்டும் அல்லது கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த 7 ம் தேதி மும்பையில் உள்ள புகார்தாரரை சந்தித்த எஸ்.ஐ., இந்த வழக்கில் இருந்து அவரையும், அவரது மைத்துனரையும் விடுவிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் தர வேண்டும். மறுத்தால் இருவரையும் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.


பிறகு அவரை ஓட்டல் ஒன்றுக்கு வரவழைத்த எஸ்.ஐ., அங்கு ரூ.16 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டு உள்ளார். பிறகு, டில்லியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வக்கீலுடன் புகார்தாரர் சென்ற போது, லஞ்சம் தராவிட்டால் பின் விளைவுகள் ஏற்படும் என எஸ்.ஐ., மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது இரு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.14 லட்சம் லஞ்சம் தர புகார்தாரர் ஒப்புக் கொண்டு உள்ளார். இதனையடுத்து லஞ்சம் யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தை எஸ்.ஐ., அவரிடம் அளித்து உள்ளார். அதில், ஹவாலா டோக்கன் நம்பர் மற்றும் ஹவாலா மோசடி முறையில் பணத்தை பெறுபவரின் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்று இருந்தன.

இது தொடர்பாக புகார்தாரர் சி.பி.ஐ.,யில் புகார் அளித்தார். சி.பி.ஐ., அதிகாரிகள் அறிவுரையின்படி புகார்தாரர் ரூ.2.5 லட்சம் லஞ்சப்பணத்தை மும்பையில் கொடுத்த போது, அதனை அரசு ஊழியர் சார்பில் பெற்றுக் கொண்ட ஹவாலா ஆபரேட்டரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். டில்லி, மும்பை, ஈரோடு நகரங்களில் செயல்படும் ஹவாலா கும்பல் மூலம் எஸ்.ஐ., லஞ்சப்பணத்தை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து அன்றைய தினமே டில்லியில் எஸ்.ஐ.,யும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement