சத்தீஸ்கர் எழுத்தாளர் வினோத்குமார் சுக்லாவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு

புதுடில்லி: சத்தீஸ்கரை சேர்ந்த ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா 59வது ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 1961ல் நிறுவப்பட்ட ஞானபீட விருது, முதன்முதலில் மலையாளக் கவிஞர் ஜி. சங்கர குருப்பிற்கு 1965ல் "ஓடக்குழல்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.


நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது.
இந்தாண்டுக்கு விருது பெறுபவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் புகழ்பெற்ற கதைசொல்லியும் ஞானபீட விருது பெற்றவருமான பிரதிபா ரே தலைமையில் நடைபெற்றது. இதில் வினோத் குமார், 88, தேர்வு செய்யப்பட்டார்.


சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர் ஆவார்.
அவரது படைப்புகள் பெரும்பாலும் மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் எளிமை ஆகியவற்றை ஆராய்கின்றன.


வினோத் குமார், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர், ஹிந்தி மொழியின் சிறந்த சமகால எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.இந்த விருதைப் பெறும் 12வது ஹிந்தி எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விருதுடன் ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசு, சரஸ்வதியின் வெண்கலச் சிலை மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.

ஹிந்தி இலக்கியம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான எழுத்து பாணிக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாரதிய ஞான பீடம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.

Advertisement