விமானத்தில் ஏற்ற மறுத்ததால் நீரில் மூழ்கடித்து நாய் கொலை

ஒர்லண்டோ: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் வளர்ப்பு நாயை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், அதை விமான நிலைய கழிப்பறை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தில் உள்ள கென்னர் பகுதியைச் சேர்ந்த பெண் அலிசென் லாரன்ஸ், 57.

இந்த பெண் கடந்த டிசம்பரில், கொலம்பியாவுக்கு, 9 வயதான 'மினியேச்சர் ஸ்க்னாசர்' வகை வளர்ப்பு நாயுடன் விமானத்தில் செல்ல திட்டமிட்டார்.

இதற்காக, ஒர்லண்டோ சர்வதேச விமான நிலையத்துக்கு நாயுடன் சென்ற அவரை, விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதற்கு, நாய்க்கு தடுப்பூசி போட்ட சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அந்த பெண் சமர்ப்பிக்காததே காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், நாயுடன் விமான நிலைய கழிப்பறைக்கு சென்ற பெண், அங்கிருந்த நீரில் நாயை மூழ்கடித்து கொலை செய்து குப்பைத்தொட்டியில் சடலத்தை வீசிவிட்டு, பின் விமானத்தில் ஏறிச் சென்றார்.

இந்நிலையில் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், விமான நிலைய கழிப்பறையில் நாயின் சடலம் கிடப்பது குறித்து துப்புரவு பணியாளர் உயரதிகாரிக்கு தெரிவித்தார்.

அவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அலிசென் லாரன்ஸ் நாயுடன் வருவதும், விமான நிலைய அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவர் நாயை விமானத்தில் ஏற்ற மறுத்ததை தொடர்ந்து நாயுடன் கழிப்பறையில் நுழைவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில், கடந்த 19ம் தேதி லேக் கவுன்டியில் அலிசென் கைது செய்யப்பட்டார். விலங்கை மோசமாக துஷ்பிரயோகம் செய்த சட்டப்பிரிவில் அலிசெனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement