ஹமாஸ் தலைவர்களுக்கு குறி: காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

8



ஜெருசலேம்: காசா மோதல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல் பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.

இந்நிலையில் காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
வடக்கு காசா, காசா நகரம் மற்றும் டெய்ர் அல் - பலா, கான் யூனிஸ் மற்றும் காசா முனையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும், ரபா நகரிலும், இஸ்ரேல் விமானங்கள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல் பர்தவீல் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியான முகமது அபு வட்பாவும் பலியானார். தொடர்ந்து, ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement