மீண்டும் மோதுவதற்கு காத்திருக்கிறேன்: ராஜிவ் சந்திரசேகருக்கு சசி தரூர் வாழ்த்து!

3

புதுடில்லி: கேரள பா.ஜ., தலைவராக தேர்வான ராஜிவ் சந்திரசேகருக்கு காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வாழ்த்து தெரிவித்தார்.


முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கேரளாவை பூர்விமாக கொண்டவர். கர்நாடகாவில் இருந்து மூன்று முறை ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். மோடியின் முந்தைய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை எதிர்த்து திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் களம் இறக்கப்பட்டார். இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்த முறை சசி தரூரை ராஜிவ் சந்திரசேகர் தோற்கடித்து விடுவார் என்று கட்சியினர் உறுதியாக நம்பினர். கடைசியில், சசி தரூர் வெற்றி பெற்று விட்டார்.

தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் ராஜிவ் சந்திரசேகருக்கு பதவி எதுவும் தரப்படவில்லை. அவருக்கு கேரளா மாநில பா.ஜ., தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை எடுத்த முடிவின்படி அவர் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இன்று அதற்கான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ராஜிவ் சந்திரசேகருக்கு அவர் எதிர்பாராத வகையில், சசி தரூரிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது.


எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சசி தரூர், 'பா.ஜ.,வின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும். மீண்டும் உங்களுடன் போர்க்களத்தில் மோதுவதற்காக காத்திருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement