சென்னை அணி அசத்தல் வெற்றி: ‛முதல்' போட்டியில் வழக்கம் போல் தோற்றது மும்பை!

1

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. தொடரின் முதல் போட்டியில், கடந்த 12 ஆண்டுகளாக, மும்பை அணி வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனை இன்றும் தொடர்ந்துள்ளது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நுார் அசத்தல்



மும்பை அணிக்கு ரோகித் சர்மா (0) ஏமாற்றினார். ரியான் ரிக்கிள்டன் (13), வில் ஜாக்ஸ் (11) சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சூர்யகுமார் (29) சிக்கினார். தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் (3), திலக் (31), நமன் திர் (17) அவுட்டாகினர். கடைசி நேரத்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து தீபக் சகார் ஓரளவு கைகொடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. தீபக் (28), சத்யநாராயணா ராஜு (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ருதுராஜ் விளாசல்



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ராகுல் திரிபாதி (2) ஏமாற்றினார். பின் இணைந்த ரச்சின் ரவிந்திரா, கேப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது விக்னேஷ் பந்தில் ருதுருாஜ் (56) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய விக்னேஷ் 'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) சிக்கினர்.

ரச்சின் அபாரம்



மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார். சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), தோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement